கொழும்பு: சச்சின் இரட்டை சதம், ரெய்னா சதம் அடித்து அசத்த, கொழும்பு டெஸ்டில் இமாலய ஸ்கோரை எட்டிய இந்திய அணி, முன்னிலை பெற்றது. இலங்கை பவுலர்கள் தொடர்ந்து ஏமாற்றம் அளித்தனர். இன்று ஒரு நாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ள நிலையில், இப்போட்டி "டிராவில்' முடிவது உறுதியாகி உள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி., மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 642 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 3 வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று 4 ம் நாள் ஆட்டம் நடந்தது. சச்சின், ரெய்னா ஜோடி அபார ஆட்டத்தை தொடர்ந்தது. தம்மிகா பிரசாத் பந்து வீச்சில் ஒரு "சூப்பர் பவுண்டரி' அடித்த ரெய்னா, அறிமுக டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார்.
12 பவுண்டரி 2 சிக்சருடன் 120 ரன்கள் குவித்த ரெய்னா, மெண்டிஸ் சுழலில் வெளியேறினார். 5 வது விக்கெட்டுக்கு சச்சின், ரெய்னா ஜோடி 256 ரன்கள் சேர்த்தது.
சச்சின் இரட்டை சதம்:
பின்னர் சச்சினுடன், தோனி இணைந்தார். அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின், டெஸ்ட் அரங்கில் 5 வது முறையாக இரட்டை சதம் அடித்தார். இவர், 203 ரன்களுக்கு (23 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட்டானார்.
மறுமுனையில் தோனி, டெஸ்ட் அரங்கில் 18 வது அரை சதம் கடந்தார். 76 ரன்கள் (7 பவுண்டரி) எடுத்த தோனி, தில்ஷன் சுழலில் பெவிலியன் திரும்பினார்.
முன்னிலை:
பின்வரிசையில் ஹர்பஜன் (0), ஏமாற்றினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிதுன், அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். இவர் 41 ரன்களுக்கு அவுட்டானார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 669 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இஷாந்த் (10), ஓஜா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
இலங்கை தரப்பில் மெண்டிஸ் 4, தில்ஷன் 3 விக்கெட் வீழ்த்தினர்.
"டிரா' உறுதி: இன்று ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்சை இலங்கை அணி மட்டுமே விளையாட வாய்ப்பு உள்ளது. இதனால் கொழும்பு டெஸ்ட், "டிரா'வில் முடிவது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது.
No comments:
Post a Comment