மும்பை: "கேன்சர்' நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்ற சச்சின் விடுத்த அழைப்பை ஏற்று, ஏராளமானோர் நிதி உதவி அளித்துள்ளனர். இரண்டே வாரத்தில் 1.25 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது.
கிரிக்கெட்டில் மட்டுமல்ல சேவை பணிகளிலும் சாதித்து வருகிறார் இந்தியாவின் சச்சின். "அப்னாலயா' அமைப்பு மூலம் 200 குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். சமீபத்தில் இவரது இளமைக் கால நண்பரின் "ஆப்பரேஷனுக்காக' 6 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார். இதன் தொடர்ச்சியாக "டுவிட்டர்' இணையதளம் மூலம் "கேன்சர்' நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார். "டுவிட்டர்' மூலம் இவரை 3 லட்சத்து 73 ஆயிரம் பேர் பின்பற்றுவதால், நிதி உதவி குவிந்தது. இரண்டே வாரத்தில் 1.25 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில் 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை அளித்தவர்கள் நேற்று மும்பையில் நடந்த சிறப்பு விருந்தில் சச்சினுடன் கலந்து கொண்டனர்.
அப்போது சச்சின் கூறுகையில்,"கேன்சரால்' பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் எனக்கு கைகொடுத்த அனைவருக்கும் நன்றி. எனது வாழ்க்கையில் மிகவும் திருப்தி அளித்த உதவியாக இதனை கருதுகிறேன்,''என்றார்.
கேன்சர் அறக்கட்டளையின் டாக்டர் ஜென்னாத் கூறுகையில்,""சச்சின் மனைவி அஞ்சலி ஒரு குழந்தை நல மருத்துவர். அவர் மூலம் தான் சச்சினை அணுகினேன். சச்சின் "டுவிட்டர்' மூலம் உதவி கேட்டதும், நிதி உதவி தாராளமாக கிடைத்தது. இதனை, தனிப்பட்ட ஒருவர் மூலம் சேவை பணிக்காக இந்தியாவில் திரட்டப்பட்ட அதிகபட்ச நிதியாக கருதுகிறேன். "கேன்சர்' நோயின் பாதிப்பை உணர்ந்து கொண்டு சிலர் 100 மற்றும் 200 ரூபாய் கொடுத்து உதவியது பிரம்மிக்க வைத்தது,''என்றார்.
No comments:
Post a Comment