காலே: காலே டெஸ்டில், "பாலோ-ஆன்' பெற்ற இந்திய அணி தோல்வியின் பிடியில் உள்ளது. சேவக் சதம் மற்றும் சச்சின் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தனர். மற்றவர்கள் சொதப்பினர். இலங்கை தரப்பில் சுழலில் மிரட்டிய முரளிதரன் 800 விக்கெட் சாதனையை நோக்கி முன்னேறுகிறார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 520 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இந்திய அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.
சேவக் சதம்:
நேற்று 4ம் நாள் ஆட்டம் நடந்தது. பொறுப்பாக ஆடிய சேவக், டெஸ்ட் அரங்கில் தனது 20வது சதமடித்து அசத்தினார். இவர் 109 ரன்கள் எடுத்த நிலையில், வெலகேதரா பந்தில் வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அனுபவ வீரர் லட்சுமண் (22) ஏமாற்றினார்.
யுவராஜ் அரைசதம்:
பின்னர் இணைந்த யுவராஜ், கேப்டன் தோனி ஜோடி நிதான ஆட்டத்தை கடைபிடித்தது. இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த போது, முரளிதரன் சுழலில் தோனி (33) போல்டானார். மறுமுனையில் யுவராஜ், டெஸ்ட் அரங்கில் தனது 9வது அரைசதமடித்தார். இவர் 52 ரன்கள் எடுத்தபோது, முரளிதரன் சுழலில் சிக்கினார்.
"பாலோ-ஆன்':
அடுத்து வந்த ஹர்பஜன் (2), பிரக்யான் ஓஜா (3), அபிமன்யு மிதுன் (8) வந்த வேகத்தில் வெளியேற, இந்திய அணி முதல் இன்னிங்சில் 276 ரன்களுக்கு சுருண்டு, "பாலோ-ஆன்' பெற்றது. இஷாந்த் (5) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் முரளிதரன் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார்.
சச்சின் நம்பிக்கை:
"பாலோ-ஆன்' பெற்ற இந்திய அணி, தொடர்ந்து 2வது இன்னிங்சை துவக்கியது. துவக்க வீரர் காம்பிர், மலிங்கா வேகத்தில் "டக்-அவுட்' ஆனார். முதல் இன்னிங்சில் சதமடித்து அசத்திய சேவக் (33) இம்முறை நிலைக்கவில்லை. பின்னர் அனுபவ சச்சின், டிராவிட் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இலங்கை பந்துவீச்சை எளிதாக சமாளித்த சச்சின், டெஸ்ட் அரங்கில் தனது 55வது அரைசதமடித்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்த போது, மலிங்கா வேகத்தில் டிராவிட் (44) அரைசதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த சச்சின் (84) மலிங்கா வேகத்தில் "எல்.பி.டபிள்யு.,' முறையில் அவுட்டானார்.
அடுத்து வந்த யுவராஜ் (5) நிலைக்கவில்லை. இந்திய அணி 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. லட்சுமண் (9) அவுட்டாகாமல் இருந்தார்.
இலங்கை சார்பில் மலிங்கா 3, வெலகேதரா, முரளிதரன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
முரளித்கு தேவை "2'
டெஸ்ட் அரங்கில், இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், தனது 800வது விக்கெட்டை பதிவு செய்ய, இன்னும் 2 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. நேற்றைய போட்டியில் முதல் இன்னிங்சில் 5, 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்திய இவர், இதுவரை 798 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இன்றும் சுழலில் அசத்தினால், 800 விக்கெட் சாதனையை படைக்கலாம்.
கைகொடுப்பாரா தோனி
இன்று கேப்டன் தோனி, லட்சுமண் மற்றும் மழை கைகொடுத்தால், போட்டியை "டிரா' செய்யலாம் என இந்திய வீரர் சேவக் நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ""இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் அனுபவ வீரர் லட்சுமண் மற்றும் கேப்டன் தோனியை நம்பி உள்ளோம். முன்னதாக தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கோல்கட்டாவில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இவர்கள் இணைந்து அணியை தோல்வியின் பிடியிலிருந்து மீட்டனர். இதனை மீண்டும் இன்றைய ஆட்டத்தில் எதிர்பார்க்கிறேன். இதேபோல, மழை கைகொடுக்கும் பட்சத்தில், இந்திய அணி தோல்வியை தவிர்க்கலாம். இதற்கு வருணபகவான் கைகொடுக்க வேண்டும்,'' என்றார்.









No comments:
Post a Comment