Pages

Monday, September 27, 2010

ஐரோப்பாவின் பிரமாண்ட 'கொலோஸியம்' அரங்கில் ரஜினியின் எந்திரன்!

ஆஸ்லோ: ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய திரையரங்கமான கொலோஸியம் கினோ-1 (Colosseum) -ல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது.


கடந்த 10 ஆண்டுகளில் இங்கு வெளியாகும் முதல் இந்தியப் படம் ரஜினியின் எந்திரன் மட்டுமே. இந்தக் காட்சிக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.


இந்த அரங்கம் நார்வேயின் தலைநகரமான ஆஸ்லோவில் அமைந்துள்ளது. Matrix, அவதார் போன்ற சரித்திரப் புகழ்பெற்ற படங்கள் இங்கே வெளியாகியுள்ளன.

மேற்கத்திய நாடுகளில் ஒரு திரையரங்கில் 700 இருக்கைகளே அதிகம் என்ற நிலைதான் இப்போது உள்ளது. அந்த பாணியைத்தான் இன்றைக்கு இந்தியாவிலும் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் கொலோஸியம் அரங்கம் 975 இருக்கைகள் கொண்டது. அதிநவீன முறையில், சர்வதேச தரத்திலான (THX) ஒலியமைப்புடன் கட்டப்பட்ட இந்த அரங்கம்தான் ஐரோப்பாவிலேயே பெரியதாகும்.

இந்த அரங்கில் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழிப் படங்களை வெளியிடுவதில்லை. காரணம் அவற்றை ஒரு காட்சி கூட முழுமையாக ஓட்ட முடியாது என்பதே. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக வெளியாகும் இந்திய/தமிழ் திரைப்படம் என்றால் அது எந்திரன் மட்டுமே.

நார்வேயில் உள்ள தமிழரான வசீகரன் சிவலிங்கத்தின் வி.என் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனமும், அபிராமி கேஷ் அண்ட் கேரி நிறுவனமும் இணைந்து இந்த சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இதுகுறித்து வசீகரன் கூறுகையில், "கொலோசியத்தில் ரஜினி சாரின் எந்திரன் தமிழ்ப் படம் திரையிடுவது மிகுந்த பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.

இந்த வாய்ப்பை எங்களுக்குத் தந்த ஜாக் ஏ ராஜசேகரின் ஃப்யூஷன் எட்ஜ் மீடியா மற்றும் ஐங்கரன் நிறுவனத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.." என்றார்.

அவரிடம் எந்திரன் படத்துக்கான வரவேற்பு எப்படி உள்ளது என்று கேட்ட போது, 'பிரமிபக்கத்தக்க வகையில் உள்ளது. நார்வேயில் மொத்தம் 14000 தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் அதிகபட்சம் 20 சதவீதத்தினர்தான் திரையரங்குகளுக்குப் போய் படம் பார்ப்பார்கள். பொதுவாக தமிழ்ப் படம் போட்டால் 1400 பேர் வரை வருவார்கள். இதனால் சின்ன தியேட்டர்களாகப் பார்த்து ரிலீஸ் பண்ணுவோம்.

ஆனால் இது சூப்பர் ஸ்டார் படமாச்சே. எதிர்ப்பார்ப்பும் எக்கச்சக்கம். எனவேதான் இந்த பெரிய தியேட்டரில் வெளியிடுகிறோம். மிகக் குறுகிய நேரத்தில் 75 சதவீதம் டிக்கெட்டுகளை விற்றுவிட்டோம். அட, சில நார்வே மக்கள் கூட எந்திரனுக்கு டிக்கெட் வாங்கியுள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நார்வேயைப் பொறுத்தவரை இது முன்னெப்போதும் நிகழாத சாதனைதான்..." என்றார்.

இந்த கொலோஸியம் அரங்கில் சிறப்புக் காட்சி முடிந்ததும், 300 இருக்கைகள் கொண்ட வேறு திரையரங்கில் எந்திரன் காட்சிகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

எந்திரன் படம் குறித்து வசீகரன் கூறுகையில், "நிச்சயம் இந்தப் படத்தால் தமிழ் சினிமாவுக்குப் பெருமை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேஜிக் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதல்ல. உலகம் முழுவதையும் வசீகரப் படுத்தும் சக்தி கொண்டவர் அவர். இந்தப் படம் மிகச் சிறந்த படைப்பாக வந்திருக்கிறது. நிச்சயம் உலக சினிமாவில் எந்திரன் புதிய சாதனைப் படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை," என்றார்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment