ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட யுவராஜ்சிங், விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று சேவாக் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்ட யுவ்ராஜ் சிங், உடல்தகுதி பெற்று விரைவில் திரும்புவார் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சேவாக் கூறியதாவது:-
யுவராஜ்சிங் இந்திய கிரிக்கெட்டின் ஒரு வைரம். அவரது ஆட்டத்திற்கு நான் சிறந்த ரசிகன். எல்லோருக்கும் இது போன்ற நேரங்கள் வரத்தான் செய்யும். அவர் தனது உடல்தகுதி பிரச்சினையை சரி செய்து பழைய நிலைக்கு திரும்புவார் என்று உறுதியாக நம்புகிறேன். அவர் விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார். இப்போது அவருக்கு தேவை என்னவென்றால், தனது சொந்த நேரத்தை விளையாட்டு சிந்தனையிலும், விளையாட்டிலும் செலவழிக்க வேண்டும்.
இலங்கையில் நடக்க உள்ள ஆசிய கிரிக்கெட் போட்டிக்கு (15-ந்தேதி தொடங்குகிறது) நான் தயாராக இருக்கிறேன். தோள்பட்டை காயம் குணமடைந்து விட்டது. தோள்பட்டை பிரச்சினையை சரி செய்ய பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சில பயிற்சிகளை மேற்கொண்டேன். இப்போது நான் முழு உடல்தகுதியுடன் உள்ளேன்.
ஷார்ட்பிட்ச் பந்து வீச்சை சமாளிப்பதில் இளம் வீரர்கள் பலவீனமாக இருக்கிறார்களே? என்று என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் அவற்றினை சிறப்பாக சமாளிப்பதற்கு தேவையான அனுபவத்தை பெற்று விடுவார்கள்.
100 ஒரு நாள் போட்டிகளுக்கு மேல் விளையாடி விட்டால், அதன் பிறகு தொடர்ந்து நன்றாக ஆடுவார்கள். 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்குள் இது போன்ற பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ள சுரேஷ் ரெய்னா, ரோகித் ஷர்மா, கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் தயாராகி விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment