காலே: மழையின காரணமாக காலே டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது.இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டி காலேவில் நடக்கிறது. "டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்தது இலங்கை அணி. சங்ககரா, பரணவிதனா சதம் அடித்து அசத்த, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது. ஜெயவர்தனா (8), பரணவிதனா (110) அவுட்டாகாமல் இருந்தனர்.
தீவிர மழை:
நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடப்பதாக இருந்தது. நேற்று முன் தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் மைதானம் ஈரப்பதமாக இருந்தது. இதனால் ஆட்டம் தொடர தாமதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மழையும் பெய்தது. மைதானத்தை பார்விட்ட அம்பயர்கள், ஆட்டம் உணவு இடைவேளைக்குப் பின் தொடரும் என அறிவித்தனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால், 2 ம் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.
வாய்ப்பு கிடைக்குமா?:
காலே டெஸ்ட் போட்டி, மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் எஞ்சியுள்ள 3 நாள் ஆட்டமும் நடக்குமா என்பது சந்தேகம் தான். இதனால் இப்போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ள இலங்கை வீரர் முத்தையா முரளிதரன், 800 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.





No comments:
Post a Comment